ஸ்ரீ வாழவந்தம்மன் திருக்கோவில் வரலாறு:
ஸ்ரீ வாழவந்த அம்மனின் பூர்வீக கோவில் அருப்புகோட்டை நகரின் கிழக்கு திசையில் கமுதி சாலையில் அமைந்துள்ளது இக்கோவிலின் முழு வரலாறு சொல்லவேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம். முதலில் முக்கியமான வரலாற்று சான்றாக தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள சில குறிப்புக்கள் இத்திருக்கோவில் தொன்மை வாய்ந்ததாக உள்ளது புலப்படுகிறது. பொங்கரி மாவினில் பொன்னடி வைத்து பொருந்திட வந்தவள்தான் வாழவந்த அம்மன். அந்த மதியணி சூலினிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலுக்கு தென்கிழக்கே ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஊரில் ஒரு வைபவம் என்றால் இந்த மங்கள காளியின் கோயிலிலிருந்துதான் துவங்குவது இன்றும் வழக்கமாக உள்ளது.
கி.பி. 1168 என்ற நாளிட்ட வாழவந்த அம்மன் கோயில் கல்வெட்டொன்றில் சோழகங்கன் என்பவன் அழகய்யா ஆழ்வார் என்ற சிலையை நிறுவியதாகக் கூறப்பட்டுள்ளது. பதிமூன்றாவது நூற்றாண்டில் குலசேகரனின் காலத்தில் தான் கோயில் அதிக பயன்களை அடைந்துள்ளது. பதினேழாம் நூற்றாண்டு கிராம ஆவணங்களில் வாழவந்த அம்மன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாழவந்த அம்மன் கோயிலுக்கு கி.பி. 1664 ல் பொம்மகோட்டை கிராமம் கொடையாக கொடுக்கப்பட்டது கொடையாளி திருமலை சேதுபதி கட்ட ரகுநாத தேவரின் முகவரான தம்பி உடைய தேவராவார். சேதுபதியின் ஆணைப்படி இக்கொடை கொடுக்கப்பட்டதாகும். இக்கிராமத்திற்கு இரண்டு மைல் தொலைவில் உள்ள வயலில் இது குறித்த ஆவணம் கிடைக்கப் பெற்றது. இந்த ஆவணத்தில் இருந்து பதினேழாம் நூற்றாண்டில்தான் அருப்புக்கோட்டை என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறலாம். கி.பி.1193ல் திருவாள உடையார் சோழகங்கன் மகன் அருளாள அழகப்பெருமாள் ஊரணி ஒன்றையும், கி.பி. 1232 ல் கிணறு ஒன்றையும் அமைத்திருக்கக் கூடும்.
இது போன்ற பல சிறப்புகளையும் பல நுற்றாண்டு பழமைவாய்ந்த இக்கோவிலின் பிடிமண் எடுத்து உருவாக்கப்பட்டதுதான் அன்பு நகரில் நவீன உலகிற்கேற்ற நவீன சிற்பங்களுடன் பழமை மாறாத ஸ்ரீ வாழவந்த அம்மனின் புதிய கோவில்.
இக்கோவில் கட்டுவதற்காக எங்கள் பங்காளிகள் பலர் இரவு பகல் பாராது உழைத்துள்ளனர், இன்னும் உழைத்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment